Monday 9 October 2017

மியூச்சுவல் ஃ பண்ட் முதலீடு - நில், கவனி, செல்..!

My article has been published in Nanayam Vikatan on 15th October 2017. The article published in the magazine is shorter and condensed version. You can read the same article below which is non-condensed version. 

Click here to read this article directly from the vikatan website.

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நில்... கவனி... செல்..!!!

தரையில் இறங்கும் விமானங்கள், எழுத்தாளர் இந்துமதியின் பிரபலமான நாவல். அதை தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும், சந்தையில் மிகவும்  தீவிரமாக இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையாக  சொல்லாம். தற்போதைய நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதற்கு முன்  இந்தியப் பங்குச் சந்தையின் தற்போதைய நிலவரத்தையும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டு விவரங்களை பார்ப்போம்.



மும்பை  பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 32402 ( 19-09-17) புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது. அதன் பிறகு சர்வதேச காரணங்களால் இறக்கம் கண்டு, இப்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் ஈக்விட்டி ஃபண்ட்களில் மட்டும் ரூ. 6 லட்சம் கோடி உள்ளது. இது கடந்த ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரூ. 2 லட்சம் கோடியாகதான் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்  மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வந்த மொத்த முதலீடு ரூ. 62,000 கோடி.

தற்போது எல்லோரும் உச்சரிக்கும் மந்திரச் சொல் எஸ்ஐபி  (SIP).  சென்ற வருடம் எஸ்ஐபி  முறையில் ஒருவர் சராசரியாக மாதம் முதலீடு செய்த தொகை  சுமார் ரூ. 2,200. இது இப்போது ரூ. 3,000 - 3,250 ஆக அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி   கணக்கு வைத்திருந்தவர்கள்  எண்ணிக்கை சுமார் 68 லட்சம். இப்போது அது, 1.4 கோடியாக  உயர்ந்துள்ளது.  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 5,206  கோடி.

எல்லாம் நன்மைக்கே என்று மனம் ளம் மகிழ்வதா, மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் பலன்களை புரிந்துகொண்டு விட்டார்கள் என்று பூரிப்பதா, அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று கொள்வதா?

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில்  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமானம் மூன்று மற்றும்  ஐந்து வருடத்தில்  இரட்டை இலக்கத்தில்  பாசிடிவ் ஆக பரவசம் தருவதாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள, மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டங்களில் தொடர்ந்து பலரும் முதலீடு செய்து வருகிறார்கள்.

பங்குச் சந்தை எப்படி உள்ளது  பார்ப்போம். சென்செக்ஸ்-ன்  பி/இ விகிதம் 24.25  ( 19-09-17)  மற்றம்  பிரைஸ் டு புக்  விகிதம்  3.08 ஆக உள்ளது. இது கடந்த கால சராசரிகளை விட சற்று அதிகமாக உள்ளது.

இப்போது ஆரம்பத்தில் கூறிய தரையில் இறங்கும் விமானங்கள் பற்றி பார்ப்போம். விமானம் எவ்வளவு உயர உயர பறந்தாலும், ஒரு நாள் தரையிறங்க வேண்டும். அதுபோலத்தான் இந்தப் பங்குச் சந்தை சென்செக்ஸ்  பி/இ மற்றம்  பி/பி  விகிதம். எவ்வளவு அதிகம் போனாலும், அது நீண்ட காலத்தில் சராசரி பக்கம் வந்துவிடும் என்பது காலத்தின் கட்டாயம்.

இது நடப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஜிஎஸ்டி மற்றம்  பண மதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட சென்செக்ஸ் இ பி எஸ் ஏற வேண்டும் அல்லது பங்குச் சந்தை   விலை இறங்க வேண்டும்.  இரண்டில் ஒன்று நடக்கும் வரை சந்தையின் ரிஸ்க் சற்று அதிகம்தான்.
இதைப் புரிந்துகொண்டு நாம் நமது பணத்தை முடிந்தவரை பத்திரமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். கடந்த 3 மற்றும் 5 வருடங்களில் கிடைத்த அதிக லாப விகிதங்களை பாரத்து, இப்போது முதலீடு செய்து இன்னும்  3 அல்லது 5 வருடங்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்று அதீத ஆசை கொள்ள வேண்டாம். உங்களது ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கு ஏற்றவாறு, ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து , பண வீக்கத்தை விட, வங்கி வட்டியை விட, சற்று கூடுதல் லாபம் கிடைத்தால் போதும் என்று பக்குவத்தோடு / எதிர்பார்ப்போடு முதலீடு செய்தால், ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

எனவே, ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள், பங்குச் சந்தை மிக அதிகமாக எறியுள்ள இந்தக் கால கட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிக  லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது   பேலன்ஸ்ட் ஃபண்ட்களுக்கோ மாறுவது  பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம்
புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், முற்றிலும்
பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டை தேர்வு செய்யாமல்  டைனமிக் அஸெட் ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

புரிந்து, தெரிந்து, அறிந்து முதலீடு செய்யுங்கள். ஞாபக்தில் வையுங்கள் தரை இறங்கும் விமானங்களை.

No comments:

Post a Comment