Saturday 16 July 2016

கம்பனில் காணத் தகுந்த இயற்கையும் காண இயலா இயற்கையும்

I presented the below research article about "Kamban and Nature" in Andaman Nicobar Islands at a Tamil conference held this year in April 2016 which was well received.

            இயற்கை என்பது பரந்து விரிந்த அகண்ட அண்வெளியில், உள்ள அணைத்து பொருள்களும், அதுவாக தாமாக நடக்கின்ற செயல்கள் அனைத்தும் அடங்கியது. வானமும் பூமீயும், காடும், கழனியும், மரமும் மலையும், மலரும், தேனும், இயற்கையே. அழகான சோலை ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சி கவிஞன் சிலாகிக்கும் தென்றல் அனைத்தும் இயற்கையே. மழையும், புயலும், பூகம்பமும், தீயும்,  வெள்ளமும், இயற்கையே. இன்னும் பலப்பல இயற்கைகளை புவி தன்னுள் இருத்தி கொண்டுள்ளது. மேலும் இந்த பூமி, சூரிய குடும்பமும்கோள்களும், பால்வெளியும் நட்சத்திரமண்டலங்களும் ஆகியனவும் இயற்கையே ஆகும்.   

            விக்கி  தமிழ் அகராதியின் படி , இயற்கை (nature) என்பது இயல்பாக இருப்பது என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை எனலாம்.  உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும்.
இயற்கை இயற்பியல் என்பது உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், மனித செயற்பாடுகளின் விளைவான பிறவும் இயற்கை என்பதற்குள் அடங்குவதில்லை. இயற்கை பொதுவாக இயல்பு கடந்தவற்றில் இருந்து வேறுபாடானது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன் பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.

இதுவரை மனிர்கள் கண்ட, காணாத அணனத்து இயற்கைப் பொருள்களையும் கம்பன் கண்டு கவிபடைத்துள்ளான். அவற்றை எடுத்துத் தொகுத்து உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கார்காலக் கருமை
     கார்காலத்தில் வானம் கருப்பாக இருக்கும், இந்த கருமைக்கு, கம்பன் காட்டும் உவமைகள் அப்பப்பா அவ்வளவு அழகு, கருப்பும் அழகு என்பது கம்பன் கூற்றுபெண்களின் கூந்தல் பின்னியிருந்தால் அவ்வளவு கருமை தெரியாது. அவிழ்த்த பிரிந்த படர்ந்த கூந்தலில் கருமை நன்கு புலப்படும். இந்த நுணுக்கங்களை அறிந்த கம்பன் அவிழ்த்த கூந்தலின் கருமை என்று கூறுகின்றான்.

நஞ்சினின், நளிர்நெடுங்கடலின், நங்கையர்
அஞ்சனநயனத்தின், அவிழ்ந்தகூந்தலின்,
வஞ்சனைஅரக்கர்தம்வடிவின், செய்கையின்,
நெஞ்சினின், இருண்டது - நீலவானமே

(கிட்கிந்தாகாண்டம் - 10. கார்காலப்படலம் – 4)

அவிழ்த்த கூந்தல், கண்ணுக்கு இடும் மை ஆகியன கருமை நிற வானத்திற்குக் கம்பன் காட்டும் உவமைகள் ஆகும். இவை மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் கருமைப் பொருள்கள் ஆகும்அடுத்தாக - கண்களால் காண முடியாத, கருமையாக, அரக்கர்களின் நெஞ்சம், சிவனது கண்டம்  போன்றனவற்றை உவமை காட்டுகிறான் கம்பன்.

பைஅணைப் பல்தலைப் பாந்தள் ஏந்திய
மொய்நிலத் தகளியில், முழங்கு நீர்நெயின், 
வெய்யவன் விளக்கமா, மேருப் பொன்திரி,
மைஎடுத்து ஒத்ததுமழைத்தவானமே
(கிட்கிந்தா காண்டம் - 10. கார்காலப் படலம் – 2)
என்ற பாடலில் மை எடுத்து ஒத்தது மழைத்தவானமே என்று மையின் கருமையை ஒப்புமை காட்டுகிறான்.

  கம்பன் இன்னுமொரு இடத்தில் "யாதினும் இருண்ட விண்" என்று இக்கரிய வானத்தைக் காட்டுகிறான்.



மாதிரக்           கருமகன், மாரிக்         கார்மழை -
யாதினும் இருண்டவிண்இருந்தைக் குப்பையின்,
கூதிர்வெங்கால் நெடுந்துருத்திக்கோள் அமைத்து,
ஊதுவெங்கனல் உமிழ் உலையும், ஒத்ததே.
(கிட்கிந்தா காண்டம் - 10. கார்காலப் படலம் – 8)
என்ற பாடலில் உவமைகளால் சுட்டமுடியாத விண்ணின் கருமையை இயல்பாகவே உரைக்கிறான் கம்பன். வானின் இயற்கையைப் பாடிய கம்பனின் பகுதி இதுவாகும்.

கம்பன் கண்ட நில இயற்கை
    நில பரப்பை அந்தந்த பகுதிகளின் இயற்கைக்கு ஏற்றாவாறு, ஐந்தாக பிரிப்பார்கள் அவை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகும். கம்பன் இராமனை இந்த ஐவகை நில பரப்பில் பயணிக்க வைக்கிறான். அப்போது இந்நிலங்களின் இயற்கை தண்மைகளை உள்ளது, உள்ளவாறு, எடுத்து இயம்பிகின்றான்

முல்லையைக் குறிஞ்சிஆக்கி மருதத்தை முல்லைஆக்கி
புல்லிய நெய்தல்தன்னைப் பொருஅரு மருதம்ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம்இடை தடுமாறும்நீரால்
செல்லுறுகதியில் செல்லும்வினை எனச்சென்றது அன்றே.

(பாலகாண்டம்/ஆற்றுப்படலம் -17)
கம்பன் கண்ட ஆறு, ஐவகை நில பரப்பில் , பாலை தவிர்த்து மற்ற நில பரப்பில் ஓடி, நெய்தலில் கலக்கின்றது. அவ்வாறு குறிஞ்சியை முல்லையாகத் திரித்ததாம். மருதத்தை முல்லையாக்கியதாம். நெய்தலை மருதம் ஆக்கியதாம். இவ்வாறு ஒரு நிலத்தை மற்றொரு நிலமாக மாற்றும் வல்லமை பெற்றது கம்ப ஆறாகின்றது.
பாலையை விடுவானா கம்பன் , இல்லை, இன்னுமொரு இடத்தில், பாலையின் இயற்கை தண்மையான சூடு பற்றி விரிவாக சொல்கிறான்.




மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
போர் கெழு வீரரே குழுமிப் போகின்றார்;
நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால்,
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார்

(கிட்கிந்தாகாண்டம்/பிலம்புக்குநீங்குபடலம் 19)

நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்;
காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால்,
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார்.

(கிட்கிந்தாகாண்டம்/பிலம்புக்குநீங்குபடலம் 22)
     பாலையின் சூடு எவ்வாறு இருந்தது, எனில், பொரி தயாரிக்க உதவும் சூடான சட்டி போல் இருந்த்து. மேலும் சொல்வான், சூட்டை தரும், சூரியனும், பாலை வெப்பத்தை கண்டு அஞ்சுவானாம். என்னே மிகுதியான கற்பனை.
            இவ்வாறு ஐவகை நிலங்களின் இயற்கை இயல்பினைக் கம்பன் பாடுகிறான்.

கம்பன் கண்ட மலர்களின் இயற்கை
            காலையில் மலர்கள் மலரும். தாமரை, சூரியகாந்தம் போன்றன மலர்கள் ஆதவனை கண்டவுடன் மலரும்.  மாலையில் மலரும் மலர்களும் உள்ளன.
            மருத நிலபரப்பில் சித்திரகூட மலையில், மாலை வேளையில் தாமரை மலர்களின் இதழ்கள்  மலர, இரவில் அல்லி மலர  மருத நிலப்பரப்பு, கம்பனின் வரிகளில் காட்சி தருகின்றது.


            மொய்உறு நறுமலர் முகிழ்த்த வாம்சில;
            மைஅறு நறுமலர்மலர்ந்த வாம்சில;
            ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும்
            கைகளும், கண்களும், கமலம் போன்றவே.
                                                (அயோத்தியாகாண்டம்/சித்திரகூடப்படலம் -42)
அமுதம் போன்ற சீதைக்கு கைகளும் கண்களும் தாமரை போன்று இருந்தனவாம். எல்லாத் தாமரை மலர்களும் இரவில் மூடிக்கொள்ளவேண்டும். பகலில் விரிந்திருக்கும். சீதையின் கண்கள் மூடுவது தாமரை மலர்கள் மூடுவதுபோல் இருக்கிறதாம். திறப்பது தாமரை மலர்கள் மலர்வதுபோல் இருக்கிறதாம். இதே நிலை கைகளுக்கும் உண்டு. இவ்வாறு மலர்களின் இயற்கையைச் சீதைக்கு ஒப்பாக்குகிறான் கம்பன்.

            தற்காலத்தில் விமானத்தில் பயணிக்கையில், மேகங்கள் இல்லாத வேளையில், பாரத்தால், வளைந்து நெளிந்து செல்லும் கோதாவரி ஆற்றைப்  பார்க்கலாம். புட்பக விமானத்தில்  சீதை செல்லும்போது கீழே ஓடும் கோதாவரியைப் பார்திருக்கலாம்.
            ஆனால் கம்பன் எந்த விமானத்தில்   இருந்து கோதாவரியை பறவை பார்வைப்  பார்த்தான் என்று தெரியவில்லை, சீதையின் கூந்தலில் இருந்து விழுந்த பூ மாலை போல் கோதாவரி இருக்கிறாள் என்கிறான்.
                        ஊதைபோல் விசையின், வெங்கண்உழுவை போல்வயவர்,ஓங்கல்                ஆதியை அகன்று செல்வார்; அரக்கனால்  வஞ்சிப்புண்ட
             சீதை போகின்றாள் கூந்தல்வழீஇவந்து, புவனம்சேர்ந்த    
            கோதைபோல்கிடந்தகோதாவரியினைக்குறுகிச்சென்றார்.

                                                            (கிட்கிந்தாகாண்டம்/ஆறுசெல்படலம் 27)
ஒரே வழியில் செல்லாது தடம்மாறி  வீட்டுக்குள் வரும் சென்னை வெள்ளம் போல் இல்லாமல் ஆற்றின் வழி அதன் போக்கில் இருப்பதால் நாடு சுபிட்சமாக இருந்தது தயரதன் காலத்தில்.
            இவ்வாறு ஆற்றின் இயற்கையை பூவின் இயற்கையோடு இணைத்துப்  பாடுகின்றான் கம்பன்.

யற்கையை இயற்கையாக இருக்கவைத்தல்.

    தற்போது கோவை, உடுமலை பகுதிகளில், காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்துவிடுவதும். அதை தடுக்க மின்சார வேலிகள், அதனால் உயிர் சேதம் போன்ற இழிநிலைகள் ஏற்படுகின்றன.   இயற்கைக்கு முரணான நிகழ்வுகள் இந்த விபத்துகளுக்குக் காரணம்.  ஆனால் அன்றய அயோத்தியில், குறிஞ்சியின் காடுகள், தனது இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டிருத்தால், விலங்குகள் நாட்டிற்கு வர தேவையில்லாது இருந்து நன்கு விளங்குகின்றது இந்த பாடல்
            வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
                               
உள்ளமும், ஒருவழிஓடநின்றவன்;
                               
தள்ளஅரும்பெரும்புகழ்த்தயரதப்பெயர்
                               
வள்ளல்; வள்உறைஅயில்மன்னர்மன்னனே
                                                                        (பாலகாண்டம்/அரசியற்படலம் -6)
            பறவைகளும் விலங்குகளும் அவை வழியில் அவை செல்லும் நிலையில் ஆட்சி செலுத்தினானாம் தயரத மன்னன்.


புறக்கண்களுக்குப் புலப்படாத இயற்கை
    மேற்காட்டிய நிலையில்  புறக்கண்களுக்குப் புலப்படக் கூடிய,  பார்க்கூடிய, இயற்கையை கம்பனின் சொல்லில் கண்டோம்.  இதோடு கம்பன் காவியத்தில் நின்று விடவில்லை. நமது புற கண்களுக்கு எளிதில் புலப்படாத,  அறிவியலில் நிருபிக்கபட்ட அகண்ட வெளி இயற்கையும் கம்பன் ஆங்காங்கு காட்டுகின்றான்.

            அறிவியலின்படி, அகண்ட வெளியில் கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வால்நட்சத்திரங்கள், மற்றும் ஏனைய கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது என்பது அறிவியல் கூற்று. இதை நன்கு அறிந்த கம்பன்வாலியும். சுக்கீரிவனும் போர் புரிந்தபோது, இவ்விரு பெரும் சக்திகள், மோதிக்கொண்டது, இரண்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதைபோல் இருந்த்து என்கிறான்.   

                                தோளோடுதோள்தேய்த்தலின்தொல்நிலம்தாங்கல்ஆற்றாத்
                                தாளோடுதாள்தேய்த்தலின், தந்ததழல்பிறங்கல்,
                                வாளோடுமின்ஓடுவபோல், நெடுவானின்ஓடும் -
                                கோளோடுகோள்உற்றெனஒத்துஅடர்ந்தார், கொதித்தார்.
                                    (கிட்கிந்தா காண்டம்/வாலி வதைப் படலம் -47)
            இப்பாடலில் இடம்பெறும் கோளோடு கோள் உற்றென என்பது கோள்களின் இயற்கையைக் கம்பன் பாடிய முறைமையாகும்.


சொல்லின் செல்வன் அநுமனை புகழ்ந்து கூறும்போது,
                '"இல்லாதஉலகத்துஎங்கும், இங்குஇவன்இசைகள்கூரக்
                கல்லாதகலையும், வேதக்கடலுமே" என்னும்காட்சி
                சொல்லாலேதோன்றிற்றுஅன்றே? யார்கொல்இச்சொல்லின்செல்வன்?-
                வில்ஆர்தோள்இளையவீர! - விரிஞ்சனோ? விடைவலானோ?
                                                            (கிட்கிந்தாகாண்டம்/அனுமப்படலம் -18)
                       
என்பான் கம்பன்இந்த பூமி, வானம், என்று இல்லாத உலகத்தில் இவன் புகழ் பரவும். உலகம் இல்லை என்று ஆகிவிட்டால், எப்படி புகழ் பரவும்இங்குதான் சூட்சும்மேஇன்று இல்லாத்து போல் இருக்கும், ஆனால் சர்வ நிச்சயமாக இயற்கையில் இருக்கும்,  அகண்ட வெளியில் இருக்கும் அணைத்து உலகங்களிலும், இவன் புகழ் பரவும், எனபதே இதன் பொருளாக கொள்ளலாம்.கம்பன் இதன்வழியே பூமி வானம் இல்லாத உலகத்தையும் கண்டுள்ளான் என்பது கருதத்தக்கது.

            தற்போது ஐரோப்பாவில், பெளதீக இயலில், அனுவினும் சிறிய எலக்டிரான், புரோட்டான், மற்றும் நியுட்டிரான் துகள்களை விட சிறிய துகள்களான "கடவுள் துகள்கள்" என்ற துகள்களைக் கண்டுபிடித்து உள்ளார்கள். இதை அன்றே கம்பன் அனுவை 100 ஆக பிரித்து "கோன்" என்று கூறுகின்றான். ஆக கோனும், கடவுள் துகளும் ஒன்றென கொள்ளலாம்.

                '"சாணிலும்உளன்; ஓர்தன்மை, அணுவினைச்சதகூறுஇட்ட
                கோணினும்உளன்; மாமேருக்குன்றினும்உளன்; இந்நின்ற
                தூணினும்உளன்; நீசொன்னசொல்லினும்உளன்; இத்தன்மை
                காணுதிவிரைவின்" என்றான்; "நன்று" எனக்கனகன்நக்கான்.

                                    (யுத்தகாண்டம்/இரணியன்வதைப்படலம் -124)
கற்றது, கையளவு கல்லாதது உலகளவு, இது ஒளவை சொன்னது
இதை சற்று மாற்றி சிந்த்திதால் கற்றது, கையளவு கல்லாதது இயற்கையளவு என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், உலகம் சிறியது, இயற்கை பெரியது.
            உலகம் ஒன்றல்ல, பல உலகங்கள் அண்ட வெளியில்  சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை நன்குணர்ந்த கம்பன், இல்லாத உலகமெல்லாம், அநுமன் புகழ் பரவும், என்றும், விராதன் வாயிலாக "நின்னவே உலகங்கள்" என்றும் உலகங்களை பண்மை சொல்லுகின்றான்.
நமக்கு தெரியாது புரியாது இருப்பதை, சுலபமாக, மாயை என்று கூறிவிடுவோம். அகண்ட வெளியில்  சுற்றிக்கொண்டிருக்கும் உலகங்களை அந்த வகையில் சேர்த்து "வீயாத பெரு மாய விளையாட்டு" என்று கம்பனால் கூற முடிகிறது.
                'நீஆதிபரம்பரமும்: நின்னவேஉலகங்கள்;
                ஆயாதசமயமும்நின்அடியவே; அயல்இல்லை;
                தீயாரின்ஒளித்தியால்; வெளிநின்றால்தீங்குஉண்டோ?
                வீயாதபெருமாயவிளையாட்டும்வேண்டுமோ?
                                                (ஆரணியகாண்டம்/விராதன்வதைப்படலம் -53)
இவ்வகையில் வீயாத பெரும் விளையாட்டாக விளங்கும் இயற்கைத் தன்மையை அதன் அறிவியில் சார் நிலையைக் கம்பன் தன் பாடல்களில் காட்டியுள்ளான் என்பதை அறியமுடிகின்றது.

தொகுப்புரை
            கம்பன் தன் காப்பியத்தில் புறக்கண்ணால் காணத்தக்க இயற்கைப்பொருள்களையும், மனிதர்களின் புறக்கண்ணால் காண இயலாத நுண்பொருள்களையும் அவற்றின் இயற்கையையும் எடுத்தியம்பும் ஆற்றல் மிக்கவன் என்பது தெரியவருகிறது.



No comments:

Post a Comment