Friday 6 October 2017

தமிழும் இணையமும் (Tamil vs Internet)

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கத்தில் பங்கு பெற்று, "இணையமும் தமிழும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். அனைவரிடத்திலும்  அக்கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. விருப்பமுள்ளவர்கள் அக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்...

முட்டை முதலா, இல்லை கோழி முதலா? முடிவில்லாத தர்க்கம், தரணி  இருக்கும் வரை தங்கும் தர்க்கம் தான். இது போல் தான் தமிழ் முதலா இல்லை சமஸ்கிருதம் எனப்படும் வட மொழி முதலா? தொடரும் தர்க்கம் தான். அவ்வப்போது ஆங்காங்கே செய்தித்தாளில் பதிப்பிக்கப்படும் தர்க்கம் தான். இதில் "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு" முந்தைய மொழியான தமிழ்  மொழி பற்றி சற்று பார்ப்போம்.

கடந்த காலம் :

தமிழ் மொழி இந்தியாவில் சுமார் 6.8 கோடி மக்களால் பேசப்படும் மொழி. இந்திய மக்கள் தொகையில் இது சுமார் 6.1% ஆகும். தரணியில் பல நாடுகளில் பேசப்படும் மொழி. ஆக சுமார் 7.6 கோடி மக்களால் பேசப்பட்டு வருகின்ற மொழி. அதே சமயம் அடுத்த மொழியான வட மொழியை பார்க்கும் போது அது குறிப்பிட்ட பகுதிகளில் பேசப்படும் மொழியாக இல்லை. மேலும் சமயம் சார்ந்த மொழியாக உள்ளது. சிலர் மறுக்கலாம். இது அழிந்து வரும் மொழியாக கருதப்படுகின்றது. உயிர்ப்பிக்க சில முயற்சிகள் எடுக்கப்படுவதாக நாம் அறிகின்றோம். சமீபத்திய கீழடி அகழ்வராய்சியை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் தெரிந்தது, பழைய தமிழில் கூறப்படும் முதல் சங்கம் தோன்றிய மதுரையாக இருக்கலாம் என்று. மற்றும் அங்கு சமயம் சார்ந்த பொருட்கள் இல்லை. எனவே தமிழை எடுத்துக்கொண்டால் தெய்வ திருமுறை திருக்குறளில் இருந்து அறிந்து கொள்ளலாம். தமிழ் சமயம் சாரந்த மொழி இல்லை.  சீறா புராணமும் , சிலப்பதிகாரமும் , நாலாயிர திவ்ய பிரபந்தமும் இருக்கும் மொழி தான் தமிழ்.
கீழடியில் தமிழ் இருந்ததா என்று மேற்கொண்டு ஆராய்ந்தால் திரும்பவும் கூறுகின்றேன் மேற்கொண்டு ஆராய்ந்தால் தமிழின் தொண்மை பற்றி தெளிவு கிடைக்கும். போகட்டும், அரசு விருப்பம் போல் நடக்கட்டும். இது கடந்த கால அகழ்வாய்வு. கடந்த காலம் தெளிவாக தெரியவில்லை. வருங்காலமாவது எப்படி இருக்கும் என்று ஆருடம் செய்வோமா. இதுவே இந்த கட்டுரையின் தலையாய நோக்கம்.

நிகழ்காலம் :தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழும்

தகவல் தொழில்நுட்பம் என்பது, ஆங்கிலத்தில் சொல்வார்களே “speed of thought” என்பது  போல, வெகு வேகமாக நமது வழக்கில் "அசுர" வேகமாக வளர்ந்து வருகின்றது. யாம் அறிந்த வரையில் 1990 வா கில் புழக்கத்திற்கு வந்த கணினியில் ஆங்கிலம் உபயோகப்படுத்தப்பட்டது. அன்றுலிருந்து இன்று வரை ஆழி சூழ்ந்த பேரலை எனும் சுனாமி அனைத்தையும் அடித்து செல்வது போல ஆங்கிலம் சூழ்ந்த கணினி தமிழை அடித்து செல்வதாக ஒரு மாயை அல்லது உணர்வு நம்மிடம் உள்ளது. சரி சுனாமியில் தமிழ் மட்டுமா அடித்து செல்லபட்டது? வட மொழி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்ன ஆனது என்ற கேள்வி எழலாம். சுனாமி ஒன்றை மட்டும் தேடி அழிப்பதில்லை. அகப்பட்டதெல்லாம் அழிவே. அது போன்ற உணர்வே தற்போது நிலவி வருகின்றது. இதில் மிகவும் பேசப்படாத, அறியப்படாத உண்மை ஒன்று புதைந்து கிடக்கின்றது. தகவல் தொழிநுட்பம் அறிந்தவர்கள், அறிந்தது தான். கணினிக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது, இந்தியாவில் பேசப்படும் இன்ன பிற மொழிகளும் தெரியாது. நாம் முன்னர் கட்டுரையின் முகப்பில் சொன்ன முட்டையும் அதாவது பூஞ்சியம் (0) மற்றும் ஒன்று (1) மட்டுமே கணினி அறியும். பின்னர் ஆங்கிலம் எதற்கு தேவை? மனிதனுக்கும் கணினிக்கும் இடையே மனிதன் புரிந்து கொள்ள ஒரு மொழி அவசியம் ஆகிறது.  இந்த மொழி ஆங்கிலமாக இப்போது இருந்து வருகிறது. ஆனால் மாற்றத்திற்கான உதயம் தூரத்தில் தெரிகின்றது. தற்போது சீனாவில் நன்கு உதித்தே விட்டது. கணினிக்கும் மனிதனுக்கும் இடையே ஆங்கிலம் இல்லாமல் மற்ற இந்திய மொழிகள் உபயோகத்தில் வர துவங்கி விட்டது.

இணையம்:  

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அதாவது 2000 முதல் பரவலாக பயன்படுத்தப்படும் இணையம் பற்றி அறியாதவர்கள் அபூர்வமே. இருந்தாலும்  முழுமை கருதி, இணையம் என்பது பல்வேறு கணினிகள்  இணைந்து நமக்கு வேண்டிய உபயோகமான தகவல்களை மிக மிக குறுகிய வினாடிகளில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது காட்சித்திரையில் காண்பிக்க உதவும் அலாவுதீனின் அற்புத விளக்கு.  கணினி தந்த வரப்பிரசாதமான இந்த இணையத்தில் தமிழ் ஆங்காங்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

அடுத்த கேள்வி இந்த இணையத்தை இயக்க ஆங்கிலம் தேவையா? பதில் என்னவோ இல்லை தான். ஆனால் ஆங்கிலம் பரவலாக பயன் படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மொத்த இணைய தளங்களில் ஆங்கில இணைய தளங்கள் அதிகம் உள்ளது. மீதம் உள்ளவை மற்ற மொழி தளங்கள். சிலருக்கு ஆச்சர்யம் தான். ஆங்கிலம் இல்லாமல் இணைய தளம் உள்ளதா என்று! சீன மொழியில் தளங்கள் மிக அதிகம். ஆக தமிழுக்கும் இணையத்திற்கும் இடையே ஆங்கிலம் ஒரு தடை அல்ல. தற்போது தமிழிலும் இணைய தளங்கள் உள்ளன. இதற்கு வலைப்பூ என்ற சொல்லாடல்  உபயோகப்படுத்தப்படுகின்றது. நானும் தமிழில் ஒரு வலைப்பூ பதிந்துள்ளேன். அதை இங்கு காணலாம் https://radhaconsultancy.blogspot.com/ 

தற்போது தமிழில் தளங்கள் இருந்தாலும் மக்கள் விரும்பி அந்த தளங்களை உபயோகப்படுத்திகிறார்களா என்றால், அது தற்போது அதிகம் இல்லை. குறைவு தான். இதில் ஆறுதலான விஷயம், தமிழ் தளங்கள் புழக்கத்தில் உள்ளன என்பது மட்டுமே. தமிழ் தளங்களின் குறைவான எண்ணிக்கைக்கு காரணம்  என்ன? முழு முதற் காரணம், தற்போது இணையம் பெரும்பாலும் தமிழும் ஆங்கிலமும் தெரிந்த யுவன் யுவதிகளால் இயக்கப்படுகிறது. இவர்கள் இயல்பாகவே ஆங்கிலம் தெரிந்த, இயக்க எளிதான, ஆங்கில தளங்களை நாடுகிறார்கள். உதராணமாக 75 மில்லியன் தமிழ் தெரிந்தவர்களில், 40 மில்லியன் பேர்கள் மட்டுமே தமிழை, உபயோகபடுத்கிறார்கள்.



இது இப்படியே இருக்குமா? தமிழ் மெல்ல இனி சாகுமா? தமிழும் காலத்திற்கேற்ப உலா வரும் என்று நம்புவோமாக. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பு என கொள்ள வேண்டாம். இதற்கும் ஒரு பின்புலம் உள்ளது. வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்.

வருங்காலம்:

தற்போது கைபேசி இல்லாதவர்கள் கற்காலத்தவர் என்றாகி விட்டது. கைபேசியிலும் நளின , சூட்டிகை கைபேசி வைத்திருப்பது கெளரவம் என்றாகிவிட்டது. இதிலும் அவர்களுக்கு ஒரு சிக்கல். கௌரவத்திற்காக கைபேசி வைத்துக்கொண்டு ஆங்கிலம் தெரியாமல் அந்த கைபேசியின் முழு உபயோகத்தையும் அனுபவிக்க முடியாமல் "பேருக்கு" வைத்திருப்பது கடினமாக உள்ளது. இவர்கள் மெதுவாக தங்கள் தாய் மொழி சார்ந்த செயலிகள் மற்றும் இணைய தளங்களை நாடுகிறார்கள். கைபேசி மூலம் இணையத்தை நாடுவதும் மிக அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் கைபேசி எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இந்த தாய் மொழி, தமிழ் மொழி சார்ந்த தகவல் பக்கங்கள் நிறைய தேவை என்பது வெட்ட வெளிச்சம். வருங்காலத்தில் தமிழ் செயலி மற்றும் தமிழ் தகவல் பக்கங்களை நாடுபவர்கள் மற்ற மொழி பக்கங்களை நாடுபவர்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று சமீபத்திய கூகில் ( Google) மற்றும் கே.பி.எம்.ஜி. ( KPMG) நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு தரப்பட்டுள்ள படத்தின் மூலம் இது தெளிவாக தெரிகின்றது. ஆகவே வருங்காலங்களில் ஆங்கிலம் இல்லாமல் பிராந்திய வட்டார மொழிகளில் , தமிழில் இணையம் உபயோகிக்கப்படும் என்பது தெள்ள தெளிவு. தமிழும் பிழைத்து இருக்கும்.



தமிழும், இணையமும், வளர வழி வகைகள்:

தமிழும், இணையமும், வளர என்ன செய்யலாம்? தமிழில் நிறைய இணைய தளங்கள் வடிவமைக்கப்படவேண்டும். தமிழ் செயலிகள், உருவாக்கபடவேண்டும். “Voice To Text”   என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், இதை தமிழில் அறிமுகபடித்தினால், தமிழில் அதிக இணைய தளங்கள் வருவதற்க்கும், கைபேசியில் அதிக தமிழ் பயன்பாட்டிற்க்கும், வழி வகுக்கும்.

ஆங்கிலத்தில் 26 எழுத்துகளாக இருப்பது, நமது தமிழில் 248 எழுத்துகளாக இருப்பதை நாம் சிறப்பு என்று கொண்டாடினாலும், தட்டச்சு பலகை, எழுத்து ஊள்ளீட்டு கருவி என்று வரும்போது, இந்த எழுத்து ஊள்ளீட்டு செயல் மிக மிக கடினமான செயலாகிவிடுகின்றது. கணனியிலும், இணையத்திலும், தமிழ் வளர இது ஒரு மிக பெரிய வேக தடுப்பாக உள்ளது. நாம் முன்னர் பார்த படி, நாம் பேச பேச, தமிழ் எழுத்துகள், காட்சி திரையில் தோன்றினால், மிக ஏதுவாக இருக்கும்.  இதனால், எழுத்து ஊள்ளீட்டு எளிதாகி , தமிழில் அதிக இணைய தளங்கள் வருவதற்க்கும் வழி வகுக்கும். இதன் மூலம் தற்பொழுது  குறைவாக இருக்கும் தாய்க்கும், பிள்ளைகளுக்குமான, தமிழ் செய்தி பரிமாற்றம், குறுஞ் செய்திகளாக பரிமளிக்கலாம்.

இந்த தொழில் நுட்ப வளர்சியால், போக போக  சமூக தொடர்பு பக்கங்கள், மற்றும் Meme என்று, எங்கெங்கு நோக்கினும், தமிழாகும் வாய்புகள், அதிகம் என்றே தோன்றுகிறது. தற்கால தடைபட்ட தமிழ் வளர்சிக்கு, தட்டச்சு பலகை மட்டுமே காரணம் என்று, முடிவு சொல்லவிரும்பவில்லை.  இணையமும், கணனியும் சேராத காரணங்கள் பல உள்ளன. 

கலைசொற்கள், அறிவியல் சொற்கள், பயன்பாடு தமிழில் குறைவு. பயன்படுத்தபட்டாலும், ஒழுங்குமுறை  வரைமுறை குறைவு. உதராணமாக மேம்படுத்தபட்ட கைபேசிக்கு ஏற்ற சொல், ஒரே மாதரி பயன் படுத்தபடவில்லை. நளின, சூட்டிகை கைபேசி, என்று அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆங்காங்கே, உபயோகபடுத்தகிறார்கள். இது ஒரு காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது. மற்றுமொறு காரணம், தற்போதய இளம் தாய்மார்கள், நமக்கு மிகவும் பரிச்சியம் இல்லாத ஆங்கிலத்தில், நமது பிள்ளைகள் படித்தால், ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம், என்ற எண்ணங்கள் உள்ளவரக்களாக இருகிறார்கள். இப்படி சமுகத்தில் ஆழபதிந்த எண்ணங்கள், இணையத்திலும் கணனி, மற்றும் கைபேசியில், தமிழ் குறைவாக இருக்க காரணீகள் ஆகிவிடுகின்றது.

தொலைநோக்கு பார்வை:

முடிவாக பல ஆயிரம் ஆண்டுகள், பயனித்து வந்த தமிழ்,  பத்தாண்டில் அழியபோவதில்லை. ஆனால் மாற்றி யோசிக்க வேண்டிய கட்டமும், இதுதானே. AI  எனப்படும் Artificial Intelligence, செயற்கை அறிவு, மற்றும் – Brain reading, போன்ற அதி நவீன தொழில் நுட்ப வளர்சியில்,  எழுத்துகள் இல்லாமல், சொல் இல்லாமல், பேச்சு இல்லாமல்,  ஒருவரது எண்ணங்கள், மற்றவருக்கு தொழில் நுட்ப  மூலமாக மாற்றபடும் போது , மொழி இருக்குமா? அப்படியே, எண்ணங்களுக்கு மொழி தேவைப்பட்டால், அது தமிழாக இருக்குமா? காலமே, பதில் சொல்ல வேண்டும்!

மேற்கொண்டு  படிக்க விரும்பவர்கள், செல்ல வேண்டிய தளம்


No comments:

Post a Comment